முன்னாள் ஜனாதிபதியும் தர்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய கொழும்பு , பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஆகியன போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அங்கு இலட்சக்கணக்கான மக்கள் சென்றுவந்த பின்னணியில் அவை சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் அம்மாளிகைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் திருத்த வேலைகலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு ஜனாதிபதியோ பிரதமரோ வதிவதற்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லமும் தீ வைத்து சேதப்பட்டுத்தப்பட்டுள்ள பின்னணியில் அவர் தற்போது பாதுகாப்புப் பிரிவினரின் பூரண பாதுகாப்பில், பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே தற்காலிகமாக, ஜனாதிபதி ரணிலுக்கு பெஜட் வீதி வீட்டை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முன்னதாக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய கொழும்பு , பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டை, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ந்தும் அவருக்கு சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் அமைச்சரவை ஊடாக முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 29 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து வெளியறினார்.
நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாமே இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த இடைக்கால தடை உத்தரவானது, பிறப்பிக்கப்பட்ட தினமான மார்ச் 29 ஆம் திகதியிலிருந்து நான்கு வாரங்களின் பின்னர் அமுலகும் வண்ணம் பிறப்பிக்கப்பட்டது.
அதனால் பெஜட் வீதி வீட்டில் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியால் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், புத்தாண்டின் பின்னர் அவர் அவ்வீட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பில் மற்றொரு வீட்டினை அரசாங்கம் வழங்கியுள்ள நிலையிலேயே, பெஜட் வீதி வீட்டை விட்டு அவர் வெளியேறி, புதிய வீட்டில் தங்கியுள்ளார்..
பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டை, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் அமைச்சரவை ஊடாக முன்னெடுக்கப்பட்ட தீர்மானம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்குமாறு கோரி மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டம் பிரகாரம் ஓய்வுபெறும் ஜனாதிபதிகளுக்கு வீடுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.