கசகஸ்தானின் ஏற்பட்டுள்ள மோசமான அமைதியின்மையைத் தணிப்பதற்காக எச்சரிக்கையின்றி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அந் நாட்டு ஜனாதிபதி Kassym-Jomart Tokayev பாதுகாப்பு படையினருக்கு வெள்ளியன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேநேரம் அமைதியை மீட்டெடுப்பதற்கான ரஷ்யாவிற்கும் அதன் நட்பு நாடுகளின் உதவிக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
20,000 வரையிலான “கொள்ளைக்காரர்கள்” நிதித் தலைநகரான அல்மாட்டியைத் தாக்கி அரச சொத்துக்களை அழித்து வருவதாக ஜனதிபதி டோகாயேவ் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார்.
ரஷ்யா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்ட அமைதி காக்கும் படைகள் கசகஸ்தானின் வேண்டுகோளின் பேரில் வந்ததாகவும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தற்காலிக அடிப்படையில் நாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவியதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் அத்துடன் சீனா, உஸ்பெகிஸ்தான் மற்றும் துருக்கியின் தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கசகஸ்தானின் முக்கிய நகரமான அல்மாட்டியில் ஆயுதமேந்திய எதிர்ப்பாளர்கள் அரசாங்கப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த வாரம் அமைதியின்மை தொடங்கியதில் இருந்து 18 காவல்துறை மற்றும் தேசிய காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3,000 க்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]