பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி ஒன்பது விக்கெட்டுகள் மற்றும் 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.
2021 ஐ.பி.எல். தொடரின் 31 ஆவது லீக் போட்டி நேற்றிரவு அபுதாபியில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கியது.
கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சுகளுக்கு தாக்கு பிடிக்க முடியாத பெங்களூரு அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்து செல்ல, 19 ஓவர் முடிவிலேயே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 92 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தது பெங்களூரு.
பெங்களூரு சார்பில் சொல்லும்படியாக தேவதூத் படிக்கல் மாத்திரம் 22 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் ரஸல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டுனையும் வீழ்த்தினர்.
93 ஓட்டம் என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தடிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிக்காட்டியது.
இதன் விளைாவக 10 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டுனை மாத்திரம் இழந்து 94 ஓட்டங்களை பெற்று, வெற்றியிலக்கை கடந்தது.
அணி சார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, வெங்கடேஷ் ஐயர் 27 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களுடனும், வெற்றியின் இறுதித் தருவாயில் களமிறங்கிய ரஸல் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பட்டியலில் ஏழாம் இடத்தில் இருந்த கொல்கத்தா ஆறு புள்ளிகளுடன் 5 ஆம் இடத்துக்கு முன்னேறியது.
இன்று டுபாயில் இடம்பெறும் 32 ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சங்சு சாம்சன் தலைமயிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதவுள்ளன.
Photo Credit ; IPL