7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்து முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவை சீனா விலைக்கு வாங்கியது என்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தனி நபரின் கைகளில் இருக்கும் தன்னிச்சையான அதிகாரங்கள் காரணமாகவே சீனா அவ்வாறு விலை கொடுத்து வாங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
தனி நபரிடம் இருக்கும் இந்த நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.சிலர் தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்துப் பொய்யான பூச்சாண்டிகளை உருவகப்படுத்தி வருகின்றனர்.
இதனைத் தோற்கடிக்க மக்களுக்கு அது தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

