நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் நேரடியாக செயற்பட்ட 1499 அரச சார்பற்ற அமைப்புக்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலத்தில் இந்த அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பாரியளவிலான நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவற்றை எந்தவழியில் செலவு செய்தது என்பது தொடர்பில் அவ்வமைப்புக்களினால் தெளிவுபடுத்த முடியாதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கொழும்பிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் நான்கிக்கு கடந்த வருடத்தில் 672 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க காலத்தில் இந்த அரச சார்பற்ற அமைப்புக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்டதாகவும், பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் இவை பாதுகாப்பு அமைச்சிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15 இற்கும் அதிகமான அரச சார்பற்ற அமைப்புக்கள் அரசில் பதிவு செய்யப்படாமல் செயற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

