நடந்து முடிந்த பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 114 ஆசனங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 114 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 57 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது.
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என்றும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து பல கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நவாஸ் ஷரீப் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தேர்தலில் எவ்வித முறைககேடும் நடைபெறவில்லை. இம்ரான்கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் பாகிஸ்தான் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு 272 பேரைத் தெரிவு செய்வதற்கு நேற்று (25) நடாத்தப்பட்ட தேர்தலில் 3,459 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342 பேர் ஆகும். இவர்களில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 70 ஆசனங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை தரப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி தனித்து ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாத ஒரு நிலையில், கூட்டணி அரசாங்கம் ஒன்றே அந்நாட்டில் அமையும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

