பதிவு திருமணம் செய்தது போல, போலியாக ஆவணங்கள் தயாரித்து, அவதுாறு பரப்பி வரும், நடிகர் அபி சரவணன் மீது நடவடிக்கை கோரி, நடிகை அதிதி மேனன், போலீசில் புகார் அளித்து உள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர், அதிரா, 26; நடிகை. பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர், சென்னை வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகார்:
என் பூர்வீகம் கேரளா. தற்போது, சென்னையில் தங்கி, அதிதி மேமன் என்ற பெயரில், படங்களில் நடித்து வருகிறேன். 2016ல், சங்கர் பாண்டி இயக்கத்தில், பட்டதாரி என்ற படத்தில், கதாநாயகியாக நடித்தேன்.
அந்த படத்தில், மதுரையைச் சேர்ந்த, சரவணகுமார், 34, என்பவர், தன் பெயரை, அபி சரவணன் என அறிவித்து, கதாநாயகனாக நடித்தார். படப்பிடிப்பு நடந்த போது, இருவரும் காதலிக்க துவங்கினோம்.
மதுரையில், 2016ல், இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்வது போன்ற விண்ணப்பத்தில், சரவணகுமார், என்னிடம் கையெழுத்து வாங்கினார்.நாளடைவில், அவரது நடவடிக்கை சரியில்லை. பல பெண்களுடன், அவருக்கு, பழக்கம் ஏற்பட்டது. இதனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அவருடன் இருந்த காதலை முறித்துக்கொண்டேன்.மேலும், ‘எங்களை, சேர்த்து வைக்க வேண்டும்’ என, மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளார்.
நான், எந்த, சார் – பதிவாளர் அலுவலகத்திற்கும் செல்லவில்லை. ஆனால், நாங்கள், பதிவு திருமணம் செய்தது போல், சரவணக்குமார், போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளார்.
காதலித்தபோது, இருவரும் சேர்ந்து எடுத்த படங்கள் மற்றும் போலி பதிவு திருமண ஆவணங்களை, ‘வாட்ஸ் ஆப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அவதுாறு பரப்பி வருகிறார்.
எனக்கு தக்க பாதுகாப்பு அளித்து, சரவணகுமார் மற்றும் அவரது பின்னணியில் இருப்போர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடிகை அதிதி மேனன், நிருபர்களிடம் கூறியதாவது:’ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். சமூக ஆர்வலர்’ என்ற பெயரில், சரவணகுமார், பலரிடம், நிதி திரட்டி, மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்ததும், ஏதாவது பிரச்னை ஏற்படும் என்பதால், அவரிடம் இருந்து விலகினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.