அடுத்து வரும் நாட்களில் புதியதோர் அரசியல் சூழ்நிலை உருவானால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிந்தித்தே தீர்மானமொன்றை எடுக்குமென அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5 ஆம் திகதி வரை சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியை அமைப்பதற்கான கதவை பொதுஜன பெரமுனவினருக்கு திறந்து வைத்துள்ளோம். சாதகமான தீர்மானமொன்றுக்கு அவர்கள் வருவார்களென்ற நம்பிக்கையுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.
வலுவானக் கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்ந்து சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறது.
உடன்படிக்கையில் இடம்பெற வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். கூட்டணிக்கான யாப்பில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளித்துள்ளோம்.
தீர்க்க முடியாத பிரச்சினையில்லையென பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ கூறியுள்ளார். ஆகவே, கூட்டணியை அமைப்பதற்கு சாதகமான முடிவொன்றை, பொதுஜன பெரமுனவினர் எடுப்பார்கள் என நம்புகின்றோம்.
பொது சின்னத்தின் அவசியம் தொடர்பில் அவர்களுக்குத் தெளிவுப்படுத்தியுள்ளோம். நாட்டின் முற்போக்குச் சக்திகள் முதல் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான விடயங்களையே நாம் வலியுறுத்துகிறோம். பொது சின்னமொன்று இருந்தால்தான் அவ்வாறு பயணிக்க முடியும்.
ஆரம்பமே பிழையாக இருந்தால் அச்செயற்பாடு வெற்றியடையாது. வெற்றியை அடைவதற்கான அத்திவாரத்தை போடுவதற்கே சு.க முற்படுகிறது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சு.கவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

