ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு பிரேரித்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலுக்கு செல்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்ரமசிங்கவைத்தவிர வேறு யார் முன்வந்தாலும் பிரதமராக நியமிக்க தயார் என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
அதனால் ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்க என்ற தனி நபருக்காக கட்சியின் எதிர்காலத்தை வீணடிக்காமல் வேறு ஒருவரின் பெயரை பிரதமர் பதவிக்கு பிரேரித்து ஆட்சியமைக்க முன்வரவேண்டும்.
அதுதான் தற்போதுள்ள நிலையில் புத்திசாலித்தனமான தீர்மானமாகும்“ என தெரிவித்துள்ளார்.

