விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற அதிமுக வேட்பாளர்கள் முத்தமிழ்செல்வன் மற்றும் நாராயணன் ஆகியோர் இன்று எம்எல்ஏக்களாக பதிவியேற்றனர். சபாநாயகர் தனபால் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த மாதம் 21ம் தேதி விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ெதாகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முத்தமிழ்செல்வன் மற்றும் நாராயணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். கடந்த 29ம் தேதி இவர்கள் இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்பு விழா நடைபெற இருந்த நிலையில், அன்றைய தினம் திருச்சி, மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனால் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால், இருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.
நாங்குநேரியில் வெற்றிபெற்ற நாராயணனும், விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற முத்தமிழ்செல்வனும் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்றதையடுத்து, முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அனுவித்து வாழ்த்து பெற்றனர். முன்னதாக மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏக்கள் நாராயணன் மற்றும் முத்தமிழ்செல்வன் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

