புனித சூசையப்பர் கல்லூரி அணிக்கும் புனித பேதுருவானவர் கல்லூரி அணிக்கும் இடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற 92ஆவது புனிதர்களின் சமர் 3 நாள் மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
இந்தப் போட்டியில் துல்லியமாக பந்துவீசி பத்து விக்கெட் குவியலைப் பதிவு செய்த விக்னேஸ்வரன் ஆகாஷ் சிறந்த பந்துவிச்சாளர், ஆட்டநாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றெடுத்து அசத்தினார்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் பயின்ற காலத்தில் கடந்த வருடம் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்த சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு புனித சூசையப்பர் கல்லூரியில் இணைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
கடந்த வருட பிற்பகுதியில் புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்த ஆகாஷ், இந்த வருடத்திலிருந்து புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்று வருகிறார்.
ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை இளையோர் அணியில் இடம்பெற்றதால் ஜனவரி மாதம் பிற்பகுதியில் இருந்தே புனித சூசையப்பர் அணியில் இடம்பெறத் தொடங்கினார்.
South Asians & Diaspora
புனித சூசையப்பர் அணியில் அறிமுகம் பெற்ற முதலாவது வருடத்திலேயே மாபெரும் கிரிக்கெட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் 44 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றி முழுப் போட்டியில் 94 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்கள் என்ற சிறந்த பந்துவீச்சப் பெறுதியைப் பதிவு செய்தார்.
அவருடன் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய சக அணி வீரர் சேனுஜ வேக்குனாகொட இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைச் சதங்களைக் குவித்து (88, 56) அதிசிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை வென்றெடுத்தார்.
சகலதுறை வீரருக்கான விருதை ஷவிது சில்வாவும் (புனித பேதுருவானவர்), சிறந்த களத்தடுப்பாளருக்கான விருதை அசதிச டி சில்வாவும் (புனித பேதுருவானவர்) வென்றெடுத்தனர்.

இந்தப் போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய தினம் 285 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய புனித பேதுருவானவர் அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது.

ஆனால், 7ஆம் இலக்க வீரர் ஜொஷுவா செபஸ்டியன், 9ஆம் இலக்க வீரர் தரீன் சன்கேத் ஆகிய இருவரும் பொறுமையுடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 8ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து புனித பேதுருவானவர் அணி தோல்வி அடைவதைத் தவிர்க்க உதவினர்.
ஜொஷுவா செபஸ்டியன் 62 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுபுறத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய தரீன் சன்கேத் 33 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களை விளாசி 63 ஓட்டங்களைப் பெற்று கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்து போட்டியை வெற்றிதோல்வியின்றி முடிவடையச் செய்தார்.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் புனித சூசையப்பர் அணியே பெரும் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், போட்டியின் கடைசிக் கட்டத்தில் புனித பேதுருவானவர் அணியின் பின்வரிசை வீரர்களான ஜோஷுவா செபஸ்டியன், தரீன் சன்கேத் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தமது அணியின் கௌரவத்தைக் காப்பாற்றினர்.

டயலொக் அனுசரணை
புனிதர்களின் சமருக்கு டயலொக் ஆசிஆட்டா பிரதான அனுசரணை வழங்கியதுடன் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசன்த தேவரப்பெரும விசேட அதிதியாகக் கலந்துகொண்டு சிறந்த சகலதுறை வீரராகத் தெரிவான புனித பேதுருவானவர் அணியைச் சேர்ந்த ஷவிது சில்வாவுக்கான விருதை வழங்கினார்.
எண்ணிக்கை சுருக்கம்
புனித சூசையப்பர் 1ஆவது இன்: 352 – 8 விக். டிக்ளயாட் (சேனுஜ வேக்குனாகொட 88, யெனுல தன்தநாராயன 84, அவீஷ சமாஷ் 53, சேத்தின கவிந்த 39 ஆ.இ., ஷவிது சில்வா 95 – 5 விக்., ஜனித் பண்டித்தரத்ன 76 – 3 விக்.)
புனித பேதுருவானவர் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 257 (அசிதிச டி சில்வா 78, ஜேசன் பெர்னாண்டோ 67, ஷவிந்த சில்வா 62, வின்னேஸ்வரன் ஆகாஷ் 44 – 6 விக்.)
புனித சூசையப்பர் 2ஆவது இன்: 190 – 3 விக். டிக்ளயாட் (அவீஷ சமாஷ் 56. சேனுஜ வேக்குனாகொட 56, யெனுல தன்தநாராயண 23. ஷவிது சில்வா 48 – 2 விக்.)
புனித பேதுருவானவர் 2ஆவது இன்: வெற்றி இலக்கு 285 ஓட்டங்கள் – ஆட்டநேர முடிவில் 215 – 9 விக். (தரீன் சன்கேத் 63 ஆ.இ., ஜொஷுவா செபஸ்டியன் 56, விஷ்வா பீரிஸ் 113 – 5 விக்.. விக்னேஸ்வரன் ஆகாஷ் 50 – 4 விக்.)
