சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் அவரது மகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகை சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக அதிரடி எக்சன் நாயகியாக நடித்திருக்கும் ‘யோகி டா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ராதா ரவி -விஷால், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘யோகி டா’ எனும் திரைப்படத்தில் சாய் தன்ஷிகா, கபீர் துஹான் சிங், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
எஸ் கே ஏ பூபதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி. செந்தில் குமார் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கு பற்றி படத்தின் நாயகியான சாய் தன்ஷிகா பேசுகையில்,
”இந்தப் படம் தொடங்கப்பட்டு நான்காண்டுகள் ஆகிறது. ஒட்டுமொத்த படக் குழுவினரும் கடினமாக உழைத்து தான் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம். இந்த திரைப்படத்தில் அதிரடி எக்சன் காட்சிகளில் நடிக்கும் போது தற்காப்பு கலையில் பயிற்சி பெற்றதால் நடிப்பது எளிதானதாகவே இருந்தது. இந்த திரைப்படத்தில் ஆறு சண்டை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. அதனால் இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதியன்று எமக்கும், நடிகர் விஷாலுக்கும் திருமணம் நடைபெறுகிறது. நாங்கள் இருவரும் 15 ஆண்டுகால நண்பர்கள். தற்போது திருமணத்தில் இணைகிறோம்.” என்றார்.