காலஞ்சென்ற லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் வீட்டிலிருந்து “ரணமயுர” விருதைத் திருடிய நான்கு பேரை பம்பலப்பிட்டி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளனர். விசேட நிகழ்வுகளில் புகுந்து சனநெருக்கடியான வேளையில் “பிக்பொக்கெட்” அடிப்பது தமது வழமையான தொழில் என சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.
லெஸ்டர் ஜெம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகளின் போது, அவரது வீட்டிலிருந்த அப்பில் ரக கையடக்கத் தொலைபேசி ஒன்றும், அரசியல்வாதியொருவரின் பணப் பை ஒன்றும் இவர்களினால் திருடப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபர்கள் கடுவெல, மதுகம, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அறிவந்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐ.தே.க.யின் மே தினக் கூட்டத்திலும் புகுந்து “பிக்பொக்கெட்” அடிப்பது இவர்களது திட்டமாக இருந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.