தற்கொலை அங்கி, கிளைமோர் குண்டுகள், காந்த குண்டுகள் உட்பட போர் தளபாடங்களை தம்வசம் வைத்திருந்ததாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் 8 உறுப்பினர்களுக்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட புலிகளின் 8 உறுப்பினர்களில் 4 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஏனைய சந்தேக நபர்களுக்கு குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், அன்பு அல்லது ரமேஷ் என்ற எட்வர்ட் ஜூலியன், அருண் என்ற சத்தியசீலன் ஜெயந்தன், குட்டி என்ற ராஜதுரை ஜெயந்தன், பெரியவன் என்ற சீதாகோபால் ஆறுமுகம், ராசன் என்ற எஸ்.ராசநாயகம், விக்டர் என்ற என். கஜகோகிலன், அன்பு என்ற எஸ். கஜனராஜ், தர்ஷன் என்ற எஸ்.சிவதரன் ஆகியோருக்கு எதிராகவே சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
