மன்னார் பாலத்திற்கு அருகாமையிலுள்ள கடல் பகுதியில் வைத்து நேற்று இரவு படகு ஒன்றினுள் வலைகளுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளை மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சுமார் 305 கிலோ 400 கிராம் மஞ்சள் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புலனாய்வு தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி ஆகியோரின், அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருசாந்தனின் வழிகாட்டலுக்கு அமைவாக விரைந்து செயல்பட்ட மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் மஞ்சள் கட்டிகளை கைப்பற்றியுள்ளனர்.
இதன் போது மன்னார் எழுத்தூரை சேர்ந்த 50 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

