தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இத்தகைய தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வறண்ட காற்று மற்றும் கடும் வெப்பம் நிலவும் சூழலில், மிகச்சிறிய தீப்பொறி கூட பாரிய அளவிலான வனப்பகுதியை அழிக்கும் வல்லமை கொண்டது என்பதால், காடுகளை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அங்கு பயணம் செய்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த தீப்பரவல்களைக் கட்டுப்படுத்த முப்படையினர், காவல்துறை மற்றும் ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்புடன் பேரிடர் மேலாண்மை மையம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. கடந்த காலங்களில் இத்தகைய அனர்த்தங்களின் போது ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுவதுடன் நீர்நிலைகள் வற்றிப்போகும் அபாயமும் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
இது போன்ற தீப்பரவல்கள் அல்லது அவசர நிலைமைகள் குறித்து பொதுமக்கள் எந்த நேரத்திலும் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மும்மொழிகளிலும் தகவல்களை வழங்க முடியும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்பதால், விழிப்புணர்வுடன் செயற்பட்டு அனர்த்தங்களைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

