எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக்கட்சியான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) களமிறக்கவுள்ள இரண்டு வேட்பாளர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.
வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும், முல்லைத்தீவு வித்தியானந்தா பாடசாலையின் முன்னாள் அதிபர் கந்தையா சிவலிங்கமும் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னிமாவட்டத்தில் முல்லைதீவு மற்றும் வவுனியாவில் எமது கட்சி சார்பில் இரு வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளோம்.
இன்னும் ஓரிரு வாரங்களில் அந்தந்த மாவட்டகுழு தீர்மானித்து அந்த வேட்பாளர்கள் யார் என்பதை இறுதி செய்து அறிவிப்போம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அண்மையில் வவுனியாவில் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய முன்னாள் வவுனியா நகரபிதாவும், வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், மற்றும் முல்லைத்தீவு வித்தியானந்தா பாடசாலையின் முன்னாள் அதிபரும் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசனின் சகோதரருமான க.சிவலிங்கம் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்துவதாக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதுடன், விரைவில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரவிக்கின்றன.

