வட மாகாணத்திற்கான ஆளுநரை தெரிவுசெய்வதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனிடம் வடமாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியதாகவும், அதனை அவர் நிராகரித்ததாகவும் அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்த விடயம் குறித்து இன்றைய சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய ஜனாதிபதி,
“முத்தையா முரளிதரனிடம் ஆளுநர் பதவியை வழங்குவதற்கான பேச்சினை நடத்தியதாகவும், ஆனால் அதற்கு அவர் உடன்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.”
இந்நிலையில், வடமாகாண ஆளுநராக சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பி.எஸ்.எம் சாள்ஸை நியமிப்பதற்கான திட்டம் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அப்படியொரு பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும், எனினும், இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அனைத்து மாகாணங்களுக்குமான ஆளுநர்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்தார்.
இதற்கமைய வடமாகாணத்திற்கான ஆளுநராக இருந்த கலாநிதி சுரேன் ராகவன் உட்பட அனைத்து மாகாணங்களிலும் ஆளுநர்களாக பதவி வகித்தவர்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்தார். எனினும் வடமாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒரு மாதகாலம் ஆகியும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

