தங்களின் சுய அரசியலுக்காக மைத்திரியும், ரணிலும் வடக்கு மாகாணத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர். அதனால் பெரும் விளைவுகள் ஏற்படவுள்ளன.
இவ்வாறு எச்சரிக்கை செய்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி. வடக்கு மாகாண சபை அமர்வு நேற்று நடைபெற்றது.
அதில் சிங்கள, முஸ்லிம் சிறப்புச் செயலணி தொடர்பான பிரேரணையை வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் கொண்டு வந்தார். அந்தப் பிரேரணை மீதான விவாதத்தின் போதே உறுப்பினர் அ.பரஞ்சோதி மேற்கண்டவாறு எச்சரித்தார்.அவர் தெரிவித்தாவது,-
வடக்கு மாகாண அபிவிருத்திச் செயலணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறந்தள்ளப்பட்டுள்ளனர். மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கப்பட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க விடயம்தான். ஆனால் அதற்குள்ளும் சூழ்ச்சிகள் உள்ளன.
மாகாண சபையின் ஆட்சிக் காலம் இன்னும் சில மாதங்களே உள்ளன. மாகாண சபையின் ஆயுள் முடிந்தால் முதலமைச்சரையும் புறந்தள்ளி வைத்துவிட்டு எதையும் செய்யலாம் என்ற உள்நோக்கமே இந்த நடவடிக்கைக்குக் காரணம்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவும் வடக்கு அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் வந்து ஆராய்ந்தார். பல மாவட்டங்களுக்கும் சென்றார். யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது சுயநலத்துடன் கருத்துக்களைக் கூறிவிட்டுச் சென்றார்.
தலைமை அமைச்சர் ஒருபுறமும், அரச தலைவர் ஒருபுறமும் தமது சுய அரசியலுக்காக வடக்கு மாகாணத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இது மாகாணத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். – என்றார்.