இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியும் பிரேசில் நாட்டுத் தூதுவராக இருந்தவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய போர்க் குற்றங்களில் ஈடுபட்டவரே என்று போரை வழி நடத்திய தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்து குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுத்துள்ளார் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய.
போரின் இறுதிக் கட்டத்தில் போர் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பொன்சேகா தன்னை விடுவித்த பின்னர் போர்க் குற்றங்களில் தான் எப்படி ஈடுபடமுடியும் என்ற சாரப்பட அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியேலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இறுதிப் போரின் கடைசிக் கட்டத்தில் எந்தவித இராணுவ நடவடிக்கையில் இருந்தும் நான் விடுவிக்கப்பட்டேன். அது தொடர்பில் அப்போதைய தளபதி சரத்பொன்சேகாஅனைத்து இராணுவ நவடிக்கைகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறீர்கள் என்று எழுதிய உத்தியோகபூர்வ ஆவணம் என்னிடம் இருக்கிறது.
எல்லாம் முடியும்போது அனைத்தையும் தானே செய்து முடித்தார் என்கிற பெருமையை தனதாக்கிக்கொள்ள பொன்சேகா விரும்பி◌னார்.
பிரேசிலில் இருந்து புறப்பட்டபோது எனக்கு எதிரான வழக்குத் தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எனக்கு நியமனம் வழங்கப்பட்டது. 2 வருடங்களுக்கே அந்த நியமனம்.
ஜுலை 15ஆம் திகதி அயலுறவுத்துறை அமைச்சு அனுப்பிய கடிதத்தில் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் எனது சேவையை முடித்துக்கொண்டு நாடு திரும்ப உத்தரவிட்டது. அதனால் 29ஆம் திகதி நான் நாடு வந்து சேர்ந்தேன். அன்று காலையில் பிரேசிலில் உள்ள தூதரகப் பதில் தூதுவர் தொடர்பு கொண்டு செய்தியை கூறினார். ஊடகங்கள் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்பதாக அவர் தெரிவித்தார்.
ஊடகங்களில் கூறப்பட்டது போல, நீதிமன்றத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. குற்றச்சாட்டு ஆவணத்தை தயாரித்த சட்டவாளர், அதனை பிரேசில் பொலிஸில் கையளித்துள்ளார். இலங்கைத் தூதுவருக்கு எதிராக விசாரணை நடத்துமாறும், தூதுவருக்கான இராஜதந்திர விலக்குரிமையில் இருந்து அவரை விடுவித்து, விரும்பத்தகாத நபராக அறிவிக்குமாறும் கேட்டுள்ளார்.
எதற்காக எனது பதவிக்காலம் முடியும் வரை காத்திருந்தார்கள்? என்கிற கேள்வி எழுகிறது. நான் தூதுவராக இருந்த போது இலகுவாக இதனைச் செய்திருக்கலாம். இது எனது பெயரை தனிப்பட்ட முறையில் களங்கப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கக் கூடும். அதன் மூலம் தூதுவராக நான் மீண்டும் நியமிக்கப்படுவதை தடுப்பதோ, வேறு மறைமுக நிகழ்ச்சி நிரல்களோ இருந்திருக்கலாம்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் காலத்துக்குக் காலம் ஒவ்வொருவர் மீது சுமத்தப்பட்டு வந்துள்ளது. முன்னதாக, கமல் குணரத்ன, சவேந்திர சில்வா போன்றோர் இலக்கு வைக்கப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமோ, அடிப்படையோ கிடையாது. எஞ்சியுள்ள சில சக்திகளின் வேலை இது.
இத்தகைய குற்றச்சாட்டுகளால் எமது வெளிநாட்டுப் பயணங்கள் பாதிக்கப்படும். ஒருமுறை, நான் மியாமி வழியாக பிரேசிலில் இருந்து பயணம் மேற்கொள்ள முனைந்த போது, அமெரிக்கா எனக்கு அனுமதி அளிக்கவில்லை. எனது மனைவி மாத்திரம் அனுமதிக்கப்பட்டார். நான் தடுக்கப்பட்டேன்.
எனது மகள் ஆஸ்ரேலியாவிலும் மகன் ஹொங்கொங்கிலும் உள்ளனர். அடிக்கடி அவர்களிடம் நான் செல்ல வேண்டியுள்ளது. குற்றச்சாட்டுகள் எந்த வகையிலானதாக இருந்தாலும், அவை பாரதூரமானவை என்பதால் தூதரகங்கள் நுழைவிசைவு வழங்க தயங்குகின்றன. இது எனக்கு கவலையளிக்கிறது.
இந்த விடயத்தை அயலுறவுத்துறை அமைச்சின் கவனத்துக்க கொண்டு வரவுள்ளேன். நாளை திங்கட்கிழமை அயலுறவுத்துறைச் செயலர் பிரசாத் காரியவசத்தை சந்தித்து, எனது தூதுவர் பணி முடிவடைந்தமை தொடர்பான ஆவணங்களைக் கையளிக்கும்போது, இந்த விவகாரத்தை எழுப்புவேன். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, அவரின் செயலருடன் பேசவுள்ளேன்.
இராணுவத்துக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விடயத்தில், அரசின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை – -என்றார்.