மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடம் உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அங்கு மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் நேற்று (26) மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த ´லங்கா சதொச´ விற்பனை நிலையம் அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றது.
குறித்த கட்டிடம் உடைக்கப்பட்டு தோண்டப்பட்டு வரும் மண், மன்னாரில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த வீடு ஒன்றிற்கு விற்கப்பட்ட மண்ணில் சந்தேகிக்கப்படும் மனித எலும்புத் துண்டுகள் பல மீட்கப்பட்டுள்ளன.
எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்த “ச.தொ.ச” விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட ஒரு டிப்பர் மண்ணை கடந்த சில தினங்களுக்கு முன் பணம் கொடுத்து கொள்வனவு செய்துள்ளார்.
குறித்த மண் வீட்டிற்கு வெளியில் கொட்டப்பட்ட நிலையில் மண்ணை அள்ளி வீட்டு வளவினுள் மீண்டும் கொண்டியுள்ளார்.
எனினும், மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் வௌிவர தொடங்கிய நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் சந்தேகம் கொண்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் குறித்த வீட்டிற்கு உடன் பொலிஸ் பாதுகாப்பை வழங்கிய நிலையில் நேற்று குறித்த பகுதிக்குச் சென்ற வவுனியா தடவியல் நிபுணத்துவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த எலும்புத்துண்டுகள் மனிதனுடையதா? அல்லது மிருகங்களினுடையதா? என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் நீதவான் மற்றும் விசேட சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளும் வரை சந்தேகத்திற்கிடமான எலும்புகள் மீட்கப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.