வில்பத்து சரணாலயப் பகுதியில் காடுகளை அழித்து மக்களைக் குடியமர்த்தியதாக தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த மனு நேற்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி கொடித்துவக்கு மற்றும் ஊடகவியலாளர் மாலிந்த செனவிரத்ன ஆகியோரினால் அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் உட்பட 07 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பிலான குற்றச்சாட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வில்பத்துக்கு அருகிலுள்ள பிரதேசங்களில் கடந்த 1999 ஆம் ஆண்டு மக்கள் வாழ்ந்துள்ளனர். எல்.ரி.ரி.ஈ. அச்சுறுத்தல் காரணமாக அம்மக்கள் வெளியேறினர். இவர்களே அப்பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டனர் என அமைச்சர் முன்வைக்கப்பட்டிருந்த மனுவில் விளக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் பொய்யானது எனவும், செய்மதி மூலம் பெறப்பட்ட காட்சிகள் மற்றும் அரச அளவையியல் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிலவரைபடம் என்பன அமைச்சரின் மனுவுக்கு எதிராகவுள்ளதாகவும் பிரதிவாதிகளினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை கருத்தில் கொண்ட மேற்முறையீட்டு நீதிமன்றம் அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனின் கோரிக்கையை இன்று நிராகரித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

