முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய அவர்களை இன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள ரீட் மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேன்முறையீட்டு நீதிபதிகளான நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோஹித ராஜகருணா ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்னிலையாகும் சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, பிற்பகல் 4 மணிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகாத சந்தேகநபர்கள் தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள பிடியாணைக்கு அமைய நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபருக்கு அவகாசம் அளிக்கப்படுவதாக குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி மற்றும் மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் உட்பட 10 சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.
எனினும் கடந்த சில நாட்களாக ரவி கருணாநாயக்கவை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் அவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

