தென்னிலங்கையின் பெரும்பான்மை கட்சிகள் இடையேயான அதிகாரப்போட்டி, அத்தரப்புக்களிடையே பெரும் மோதலை ஏற்படுத்தியிருக்கின்றமை ஒருபுறம் இருக்க, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பெரும் முரணியலைத் தோற்றுவித்திருப்பதாக அறியவருகின்றது.
“மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கும் தீர்மானத்தை நாங்கள் எடுத்து அறிவித்தால், எமது தமிழ் ஊடகங்கள் நாம் ரணிலை ஆதரிப்பதாக முடிவு எடுத்திருக்கின்றோம் என்று செய்தி வெளியிடுகின்றன.” என சுமந்திரன். முன்பு வைச்சு வாங்கியிருந்தார் சிறீதரன் .
“நாம் எடுத்த தீர்மானம் மஹிந்தவை எதிர்ப்பது என்பதே தவிர, ரணிலை ஆதரிப்பது என்பதல்ல” – என்று திரும்பத்திரும்ப விளக்கமளித்திருந்தார் சுமந்திரன்.
இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.கட்சி அரசுக்கு நாம் ஆதரவளிக்கின்றோம் என்று கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும் சத்தியக்கடதாசி மூலம் ஒப்பமிட்டு உறுதியளிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியிருக்கின்றார்.
நேற்று பிற்பகல் நாடாளுமன்ற அமர்வுகளும் முடிந்த பின்னர் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சம்பந்தன் தலைமையில் கூடி நிலமைகளை ஆராய்ந்தனர்.
அப்போது இந்த விடயத்தை வலியுறுத்தியிருக்கிறார் சுமந்திரன்.
“மஹிந்தவின் தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்புவதாயின் ரணிலின் அரசு வரவேண்டும் நாடாளுமன்றில் 113 எம்.பிக்கள் ரணிலின் அரசை தாங்கள் ஆதரிக்கின்றோம் என்று சத்தியக்கடதாசி மூலம் சபாநாயகர் ஊடாக உறுதியுரை கொடுப்பார்கள் என்றால் ரணிலை பிரதமராக நியமிக்கின்றமையைத் தவிர, ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை. அந்த 113 எம்.பிக்கள் ஆதரவு ரணிலுக்கு கிட்டுவதற்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இப்படி சத்தியக்கடதாசி கொடுக்க வேண்டும்.
அப்படிக் கொடுத்தால் தான் மஹிந்த அரசை வீட்டிற்கு அனுப்ப முடியும். ரணிலின் அரசை நாம் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தால் தான் அதைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உரிய நிவாரண அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கலாம். அதுவே நாம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அவசரப் பணியாகும். என்ற சாரப்பட சுமந்திரன் விளக்கினார். அதனை சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர் வரவேற்றனர்.
எனது கட்சியினருடன் ஆலோசித்துவிட்டுத்தான் நான் ஒரு முடிவை சொல்வேன் என்றார் சித்தார்த்தன்.
“ரணிலை நம்பினால் மீளவும் ஏமாற வேண்டி வரும்” – என கூறினார் செல்வம் அடைக்கலநாதன்.
ரணிலை ஆதரிக்கும் முடிவை கடுமையாக எச்சரித்தார் சிறீதரன் எம்.பி. தான் அப்படி ஒரு சத்தியக்கடதாசியில் ஒப்பமிட்டு தரமாட்டேன் என்றும்? மஹிந்த, ரணில் ஆகிய இரு தரப்புக்களும் நம்ப முடியாதவை, நம்பக்கூடாதவை என்றும் அவர் சொன்னார்.
சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சார்ள் நிர்மலநாதன் போன்றோரும் சிறீதரனின் கருத்தை ஆமோதித்து கருத்தை வெளியிட்டனர்.
ஏனையோர் சம்பந்தன் – சுமந்திரன் – மாவை கூறியபடி ரணிலை ஆதரித்து அவருக்கு சார்பான ஆதரவை உறுதிப்படுத்தும் தனித்தனி சத்தியக்கடதாசிகளை வழங்கும் திட்டத்தை ஆதரிப்பவர்களாக இருந்தனர்.
ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்ட எடுக்கும் நிலமையே அங்கு அதிகம் காணப்பட்டது.
இந்த கூட்டம் நடைபெற்றுக்கொன்டிருக்கும் போதே கூட்டமைப்பின் எம்.பிக்களை ரணில் நேரடியாக சந்திக்க விருப்பம் தெரிவிப்பதாக இரா.சம்பந்தனுக்கும் தொலைபேசி வழியாக தெரிவித்தார்.
அச் சந்திப்பு நேற்று மாலை 5 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து நேற்றைய கூட்டத்தை முடித்துக்கொண்டு அனைத்து எம்.பிக்களும் அலரி மாளிகைக்குப் புறப்பட்டனர்.
சிறீதரன் எம்.பி மட்டும் “நான் ரணிலை சந்திக்க விரும்பவில்லை” என கூறிவிட்டு கிளிநொச்சி புறப்பட்டார். ஏனையோர் அலரி மாளிகை ஏகினர்.

