ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் அனிருத், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், தலைவர் சொன்ன அதிசயம், அற்புதத்தை வெச்சுத்தானே எல்லாரும் பேசிட்டிருக்காங்க. நான் சொல்றேன் அந்த அதிசயம், அற்புதமே அவர்தான். அவர் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். பகவத்கீதை, பைபிள், குரானில் எல்லாம் என்ன சொல்லிருக்கு? யாரும் மனதால் கூட வேறு யாருக்கும் தப்பு பண்ணிடக்கூடாது என்று. யாருக்கும் துரோகம் பண்ணாதீங்க – உங்க சொல்லாலும், செயலாலும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பார்கள். உன் கடமையை ஒழுங்கா செய் என்பார்கள்.
இதையெல்லாம் புத்தகத்தில் படித்து விட்டோம். ஆனால் அதை நம்ப வேண்டுமே. அதற்கு ஒரு ஆள் படைக்க வேண்டுமே. அதான் தலைவரைக் கடவுள் படைத்தார். நமக்கெல்லாம் ஒரு குரு அவர். கடவுள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குருவைப் படைப்பார்.
இதுவரை அவர் யாரையாவது திட்டிப் பார்த்திருக்கிறீர்களா? அவர் யாருக்காவது துரோகம் செய்து பார்த்திருக்கிறீர்களா? அவரால் அழிந்த குடும்பம் என்று யாரையும் பார்த்திருக்கிறீர்களா? நூறாவது படம் ராகவேந்திரா சாமி என்று படம் எடுத்த ஒரு சூப்பர் ஸ்டாரைக் காட்டுங்களேன் பார்ப்போம். மற்றவர்கள் எல்லாம் தனது நூறாவது படம் மாஸா, ஸ்டைலா இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.













