வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இதற்கு முன் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் அதிகமான இடங்களில் ஒரு சேர நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜாஸ் சினிமாஸ், மிடாஸ், சுரானா குழுமம் உள்ளிட்ட 10 நிறுவனங்களைக் குறிவைத்து இந்தியா முழுவதும் 4 பெருநகரங்களில் 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனையில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான ஜாஸ் சினிமாஸ், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மது ஆலைகள், ஜெயா தொலைக்காட்சி அலுவலகங்கள், நமது எம்ஜிஆர் பத்திரிகை, டிடிவி தினகரன், திவாகரன், விவேக், நடராஜன், மகாதேவன், விவேக் சகோதரி கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், டாக்டர் வெங்கடேஷ், ஜெயலலிதாவுக்காக வாதாடிய வழக்கறிஞர் செந்தில், விவேக்கின் மாமனார் பாஸ்கர், உள்ளிட்ட சசிகலா சொந்தங்கள், மணல் ஒப்பந்தக்காரர் ஆறுமுகசாமி அலுவலகங்கள் வீடுகள், காற்றாலை நிறுவனங்கள், சுரானா குழுமம், புதுவை லட்சுமி குரூப் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனையில் என்றுமே இல்லாத அளவுக்கு 1900 க்கும் குறைவில்லாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தலைமையேற்று நடத்த உயர் அதிகாரிகள் 10 க்கும் மேற்பட்டோர் பல மாதங்களாக திட்டமிட்டு முடிவு செய்து ஒரே நாளில் சோதனையில் குதித்துள்ளனர்.
தமிழகத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அதிகாரிகள் இல்லாததால் பக்கத்து மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்துள்ளனர். இவர்களுக்காக 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கியது. பலமாதங்களாக சிறுக சிறுக தகவல்களை சேகரித்து யாரும் சந்தேகப்படா வண்ணம் திடீரென அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஒரு குடும்பத்தை சேர்ந்த இவ்வளவு எண்ணிக்கையிலான நபர்களின் வீடுகள் அலுவலகங்களில் இதற்கு முன் இவ்வளவு பெரிய சோதனை நடைபெற்றது இல்லை. சோதனை நடத்தும் கடைசி கட்டம்வரை என்ன செய்யபோகிறோம் எனபதை யாருக்குமே சொல்லவில்லை.