தென்னிந்தியத் திரையுலகின் முக்கிய படப்பிடிப்புத் தளமாக சென்னை மாநகரம் ஒரு காலத்தில் இருந்தது. 80களில் இருந்து அந்தந்த மொழித் திரைப்படங்களை அந்தந்த மாநிலத் தலைநகரங்களுக்கு மாற்றிக் கொண்டார்கள்.
சென்னையில் படமாகி வந்த தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களின் படப்பிடிப்பு அவர்களது சொந்த மாநிலங்களில் படமாக ஆரம்பித்தது. தற்போது தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் கூட ஐதராபாத்தில் தான் அதிகமாகப் படமாகி வருகிறது.
ஐதராபாத்தில் உள்ள பிரபலமான ஸ்டுடியோக்களில் ஒன்றாக ராமா நாயுடு ஸ்டுடியோஸ் இருந்து வருகிறது. நனக்ராம்குடா என்ற இடத்தில் அமைந்துள்ள ராமா நாயுடு ஸ்டுடியோவை விரைவில் மூட உள்ளார்களாம். 7.5 ஏக்கரில் அமைந்துள்ள அந்த ஸ்டுடியோவின் தற்போதைய சந்தை மதிப்பு 400 கோடி என்கிறார்கள். பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுடன் அந்த இடத்தை கேட்டட் கம்யூனிட்டியாக மாற்ற ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
இருந்தாலும், ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் மற்றும் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ராமா நாயுடு ஸ்டுடியோக்கள் தொடர்ந்து செயல்படுமாம். சென்னையில் இருந்த பல ஸ்டுடியோக்கள் ஏற்கெனவே பிளாட்டுகளாக மாறி மூடப்பட்டுவிட்டது. அதனால் தான் இங்கு தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறாமல் ஐதராபாத்தில் நடக்கின்றன. அதனால் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளும் பறி போகின்றன. இவற்றைப் பற்றி தமிழ்த் திரைப்பட சங்கங்கள் கண்டு கொள்வதேயில்லை.

