சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்டது. இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் வழிநடத்தலின் கீழ், வழக்கின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அமைச்சராகப் பதவி வகித்த போது தனது சட்டபூர்வமான வருமானத்தை மீறி, சுமார் 150 மில்லியன் (15 கோடி) ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சட்டவிரோதமாக ஈட்டியதாக மேர்வின் சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

