19 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் ( Indian Premier League ) தொடரின் 13 ஆவது லீக் போட்டி புதன்கிழமை (7) அசாம் மாநிலம் குவஹாட்டியில் (Guwahati) நடைபெற்றது.
இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பாய் இந்தியன்ஸ் அணிகள் மோதின.
பலத்த மழை காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பித்த நிலையில், அது 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்தது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ( Vaibhav Suryavanshi ) அதிரடி ஆட்டம். 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி, முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா ( Jasprit Bumrah ) வீசிய முதல் பந்தையே லோங்-ஓன் பகுதியில் சிக்சருக்கு தூக்கி அடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
பும்ரா போன்ற உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளரை சூர்யவன்ஷி எப்படி எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது போட்டியின் முக்கிய தருணமாக மாறியது. இதை எதிர்பார்க்காத பும்ரா, சிரித்தபடி பதிலளித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், அதே ஓவரில் இன்னொரு சிக்சரையும் பறக்கவிட்ட சூர்யவன்ஷி, மொத்தம் 14 பந்துகளில் 39 ஓட்டங்கள் (1 பவுண்டரி, 5 சிக்சர்கள்) அடித்தார். பின்னர் ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur) வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற போது எல்லைக்கோடு அருகே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இளம் வீரரின் இந்த அதிரடி ஆட்டமும், பும்ராவின் ரியாக்ஷனும் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ரசிகர்கள் இந்த காட்சியை வைத்து மீம்ஸ்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

