விசாரணைக்குழு நியமிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை வடக்கு மாகாண முதலமைச்சர் பக்கச்சார்பாகவும், சட்டத்துக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் மீன்பிடிப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.-அவர் தெரிவித்ததாவது;
வடக்கு மாகாண முதலமைச்சர், ஏனைய அமைச்சர்கள், முன்னாள் சுகாதார அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 30 ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்துள்ளேன்.
குறிப்பாகக் கடந்த காலங்களில் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பாக இருக்கின்றன.
வடக்கு மாகாண ஆளுநர் கடந்த மாதம் 23 ஆம் திகதி புதிய அமைச்சர்கள் இருவரை நியமிக்கின்ற அதே சந்தர்ப்பம், கடந்த 20 ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் என்னை அமைச்சில் இருந்து நீக்கியதாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.
13 ஆவது திருத்தச்சட்டத்திலோ அல்லது மாகாண சபைகள் சட்டத்திலோ எந்த ஒரு இடத்திலும் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட எந்த ஒரு அமைச்சரையும் தானாக நீக்குவதற்கு எந்த ஒரு சட்ட ஏற்பாடுகளும் இல்லை. ஆனால் வடக்கு மாகாண ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருக்கின்றது. முதலமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரங்களை அவர் சரியான முறையில் பயன் படுத்தவில்லை.
கடந்த 20 ஆம் திகதி முதலமைச்சர் என்னைத் தானாகப் பதவி நீக்கியமையே நான் நீதிமன்றத்தை நாடியமைக்கான காரணமாக உள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் எனது அமைச்சுச் சார்ந்த வேலைத்திட்டங்களில் தலையிடக்கூடாது என்றும் மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளேன். எதிர்வரும் 4 ஆம் திகதி அல்லது 7 ஆம் திகதி விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினமே இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
அல்லது மிக விரைவாக இரண்டு வாரத்துக்குள் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும், தங்களுக்கு எதிராக நான் கூறிய விடயங்களுக்குப் பதில் கூற வேண்டும். அதன் பின்னர் நீதிமன்றம் சரியான முடிவுக்கு வரும்.
எது எவ்வாறு இருப்பினும் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை முதலமைச்சர் பக்கச்சார்பாகவும், சட்டத்துக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஆரம்பத்தில் இருந்து இன்று வரை நான் போராடிக்கொண்டிருப்பது மீண்டும் அமைச்சுப்பொறுப்பை எடுத்து பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. எல்லோரும் சட்டத்துக்கு முன் சமன். 13 ஆவது திருத்தச்சட்ட மும்,மாகாண சபைகள் திருத்தச்சட்ட மும் மிகச் சிறிய பக்கங்களைக் கொண்டது. இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்தே மாகாண சபைகள் இயங்க வேண்டும். இதற்குப் புறம்பாக எவரும் செயற்பட முடியாது.
முதலமைச்சருக்கும், எனக்கும் எந்த விதத்திலும் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை. மாகாண சபையை ஏனையவர்கள் கேலியாக சித்திரிக்கின்ற வகையில் மாகாண சபையின் நிர்வாகம் இருக்கின்றது. அவர் ஒரு நீதியரசர் நீதியாகச் செயற்பட்டிருக்க வேண்டும்.-ஒரு மாத கட்டாய விடுமுறை விதிக்கப்பட்டமையே அனைத்துப் பிரச்சினைக்கும் காரணமாக உள்ளது.
நீதியை நிலை நாட்டுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். மேலும் சில முக்கிய நபர்களுக்கு எதிராக சில சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன் – என்றாா்.