மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான லிட்ரோ எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எரிவாயு கப்பல்
அதன்படி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனினும், சர்வதேச சந்தையில் எரிசக்தி உற்பத்திக்கு நிலவும் கேள்வியின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி புதிய விலை அதிகரிக்கப்படும் என சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் எரிபொருள் விலைகள் பாரியளவில் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

