அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களது விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியும் அநுராதபுரம் நோக்கிய பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி நேற்று (12 ) காலை வவுனியாவை வந்தடைந்தது
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவனி கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இயக்கச்சி, மாங்குளம், ஓமந்தை ஊடாக நேற்று(12) காலை வவுனியா நகரை வந்தடைந்தது. இப் பேரணி இன்று அநுராதபுரத்தை சென்றடைகிறது.
இந் நடைபவனிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா தாண்டிக்குளத்தில் வடமாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், பொது அமைப்புக்கள், வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கம், உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பேரணியுடன் இணைந்தனர். ஏ9 வீதியுடாக பயணித்த பேரணியானது ஹொரவப்பொத்தான வீதியூடாக சென்று பஜார் வீதியுடாக மீண்டும் ஏ9 வீதியை வந்தடைந்தது.
இதன்போது வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்திற்கு தங்களது ஆதரவை வழங்கியிருந்தனர்.யாழ்ப்பாணத்திலிருந்து நடைபவனியாக வந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் மருத்துவ பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக ஏ 9 வீதியில் அமைந்துள்ள மதவுவைத்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் அந்தனர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விஷேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன.
நேற்று மாலை மதவாச்சிக்கு சென்ற குழுவினர் இன்று அநுராதபுரத்தை சென்றடையவுள்ளனர்.