முல்லைத்தீவு மாங்குளம் – மல்லாவி வீதியில் உள்ள தேக்கங்காட்டுப்பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மிதிவெடி வெடித்ததில் அதில் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கிளிநொச்சி – பரவிபாஞ்சானை சேர்ந்த 24 வயதுடைய பத்மநாதன் திலீபன் என்ற நபர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், ஓமந்தையினை சேர்ந்த 25 வயதுடைய நிதர்சன் என்பவர் காயமடைந்துள்ளார். மிதிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட இருவரும் மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழந்தவரின் உடல் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
