மன்னார் – இராமேஸ்வரம் படகு சேவைக்கு அரசு அனுமதித்தால் நாங்கள் நிதி தர ஆயத்தமாக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றியபோது மன்னார் – இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து, மன்னார் – ராமேஸ்வரம் படகுச் சேவை குறித்து விளக்கிக் கூறிய சாணக்கியன், போக்குவரத்து அமைச்சகம் இந்த செயல்முறையை விரைவுபடுத்த முடிந்தால், மன்னார் – ராமேஸ்வரம் படகு சேவையை மீண்டும் தொடங்குவதற்கான நிதிப் பங்களிப்பினை பெற, நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்,
மன்னார் – இராமேஸ்வரம் இடையே குறைந்தளவான போக்குவரத்து தூரமே உள்ளது. ஆனால், காரைக்கால் – காங்கேசன்துறை இடையிலான படகு சேவைகள் தொடர்பிலேயே அரசாங்கம் கூறுகிறது. அந்தப் படகு சேவை மிக நீளமானது ஆகும். இது நீண்ட தூரமாகும். வடக்கில் இந்த சேவைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மக்கள் மிகவும் நன்மையடைவர். அத்துடன் வியாபார நடவடிக்கைகளும் வலுப்பெறும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் உருவாகும்.
இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்கும் விடயத்தில் இந்தியாவும் இதனை முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.