தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் சந்திப்பொன்று இன்று காலை மன்னாரில் இடம்பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த விசேட சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது டெலோ கட்சி சார்பாக வன்னியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் தொடர்பான அறிமுகம் இடம்பெற்றது.
மேலும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் டெலோ கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள், கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டது போல் இந்த முறை முன்னெடுக்க முடியாமை தொடர்பாகவும் தற்போதைய நிலையில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

