ஆனமடுவ நகரிலுள்ள மதீனா ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களையும் இம்மாதம் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடுவ மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி சுனில் ஜயவர்தன நேற்று உத்தரவிட்டுள்ளார்.
ஆனமடுவை மற்றும் அயல் பகுதிகளையும் சேர்ந்த 7 இளைஞர்களே இவ்வாறு விளக்கமளியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 18 முதல் 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 11 ஆம் திகதி அதிகாலை 3.00 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் முதலில் ஹோட்டலுக்கு முன்னால் வந்து பெற்றோலை ஊற்றிவிட்டு, பின்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் மூன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஹோட்டலுக்கு அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி. கெமராவைப் பயன்படுத்தி ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ஏனையோர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.