மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள கருவப்பங்கேணி, மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளை முற்றுகையிட்ட காவல்துறையினர் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 5 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளுடனும் 24 போத்தல் கசிப்புடன்மற்றொருவர் உட்பட இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து மட்டு தலைமையக காவல் நிலைய ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் பிரபாத் பெர்ணான்டோ தலைமையிலான காவல்துறையினர் சம்பவ தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கருவப்பங்கேணி பகுதியிலுள்ள போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் பிரபல போதைப் பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
போதைப்பொருள் வியாபாரி கைது
இதன்போது 34 வயதுடைய பிரபல வியாபாரியை 5 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்த போது அங்கு பெண்கள் உட்பட சிலர் ஒன்றிணைந்து கைது செய்தவரை கொண்டு செல்ல விடாது காவல்துறையினரை தடுத்து பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை அங்கிருந்த காவல்துறையினர் மீட்டெடுத்து கொண்டு சென்றனர்.

அதேவேளை திருப்பெருந்துறை பகுதியில் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட போது அங்கு கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 56 வயதுடைய ஒருவரை 24 போத்தல் கசிப்புடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரியை காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மற்றும் கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

