மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் முறக்கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள இராணுவ முகாம் அகற்றுவது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இது தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்தார்
முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலய காணியினுள் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இவ் இராணுவ முகாம் பலப்படுத்தும் முகமாக அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் காணியும் அபகரிக்கப்பட்டுள்ளது.பல உயிர்கள் இவ் இராணுவ முகாமில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். முன்பு அவ் வீதியால் செல்லும் போது மக்கள் அச்சமடைந்தார்கள். இராணுவ புலனாய்வாளர்களால் பலர் கடத்தப்பட்ட நிலை காணப்பட்டது.இதன்போது முறக்கொட்டாஞ்சேனை பாடசாலையினை பிரதேசத்தின் ஆற்றோரமாக மாற்றப்பட்டது. இவ்விடம் வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடியதும் பாதுகாப்பற்றதும் குறைந்த நிலப்பரப்பையும் கட்டத்ததையும் கொண்டமைந்து காணப்படுகிறது.மாணவர்கள் ஏற்கனவே கல்வி பயின்ற இப் பாடசாலையானது மீளவும் பெறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய நாங்கள் கடந்த காலத்தில் பல பேச்சு வார்த்ததைகள் மேற்கொண்டுள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேசியும் பலன் கிடைக்கவில்லை. 2015 இல் ஜனாபதி மைத்திரிபால சிறிசேன வுடன் பேசி பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலனி கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பான கருத்து முன்வைக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகளில் இராணுவ முகாம் இருந்தால் 31.12.2018 இற்கு முன்பு அவற்றினை அகற்றி தருவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவ்வேளையில் இவ் முகாம் பாரிய முகாமாக காணப்படுவதனால் இடமாற்றி செல்வதற்கு போதியளவு காணி இல்லாமை தொடர்பான கருத்து இராணுவ தரப்பில் முன்வைக்ககப்பட்டது என்றார்.அவ் வேளையில் புன்னைக் குடா பிரதேசத்தில் இதற்கான காணியினை வழங்குமாறு அரசாங்க அதிபர் மற்றும் ஜனாதிபதியிடம் கோரியிருந்தோம். அதற்கு தற்போதைய இராஜாங்க அமைச்சர் குறித்த பிரதேசத்தில் காணி வழங்க முடியாது எனவும் கிரான் பிரதேசத்தில் காணி வழங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.அதற்கு கிரான் பிரதேசம், மக்கள் பிரதேச குடியிருப்பு காணிகள் காணப்படுவதனால் அங்கு காணி வழங்க முடியாது என தெரிவித்திருந்தேன்.
புன்னைக்குடா பிரதேசமே பொருத்தமான பிரதேசம் என்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான அரச காணி காணப்படுவதாக தெரிவித்தேன். அதற்கு இராணுவத்தினரும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.இதன்போது 31.12.2018 இற்கு முன்பு குறித்த பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் புதிதாக கட்டட வசதிகள் இல்லாமை தொடர்பாகவும் அதற்கான கால அவகாசம் தேவையென இராணுவ தரப்பில் கோரியிருந்தனர். இராணுவத்தினருக்கு தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டதும் இராணுவத்தினர் அங்கு சென்று விடுவார்கள். அதன்பின்பு மீண்டும் பாடசாலை காணியும் தனியாருக்கு சொந்தான காணியும் மீண்டும் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்றார்.இதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள்; என்ற வகையில் இவ் நடவடிக்கையினை கவனமாக மேற்கொண்டு வருகின்றோம்.
இவ் வேளையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் குறித்த இராணுவ முகமை அகற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யவுள்ளதாக அறிகின்றேன். கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்வது மக்களின் ஜனநாயக உரிமை. அதற்கு எதிரானவன் அல்ல.முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 2008 தொடக்கம் 2012 வரை மகிந்த ராஜபக்ஸவின் செல்லப் பிள்ளையாக இருந்தவர். அவர் நினைத்திருந்தால் அவ் இராணுவ முகாமை அப்போதே அகற்றி இருக்கலாம். அதனை அகற்ற வேண்டும் என குரல் கொடுத்தவர்கள் நாங்கள்.எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி செயலனி குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அவ்வேளை இவ் விடயம் தொடர்பாக எப்போது, எந்த காலப்பகுதியில் அகற்றப்படும் என்பதை மீண்டும் ஜனாதிபதியிடம் கோருவோம் என்றார்

