மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயது பெண் ஒருவரின் உடல் முழுவதும் மக்கிப் போன நிலையில், எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய மகன், தாயை எலும்புக் கூடாக மட்டுமே பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆஷா சகானி என்ற 63 வயது பெண், கணவர் இறந்த பிறகு அதாரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் ஒரே மகனான ரிதுராஜ் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஆக.,06) தான் மும்பை திரும்பி உள்ளார்.
வீட்டிற்கு வந்த ரிதுராஜ், பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்பவில்லை. இதனால் பூட்டு சரி செய்பவரை அழைத்து வந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாலை 4.30 மணிக்கே கதவை திறந்துள்ளார். வீட்டிற்குள் தனது தாய் எலும்புக் கூடாக கிடப்பதை கண்ட ரிதுராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
முற்றிலும் மக்கிப் போகி எலும்புக் கூடாக இருந்த ஆஷாவின் உடலை கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தனியாக வசித்து வந்த ஆஷா, எப்போது, எப்படி இறந்தார் என தெரியவில்லை. இது இயற்கை மரணமா, தற்கொலையா, கொலையா என்பதும் தெரியவில்லை. தனது தாய் என்றைக்கு, எப்படி இறந்தார் என்பது கூட தெரியாததால் ரிதுராஜ் கதறி அழுதார். ஆஷாவின் இந்த மரணம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.