வடக்கு கிழக்கில் உள்ள 15 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி நடந்த தேர்தலின் மூலம், 340 உள்ளூராட்சி சபைகளுக்கு 8690 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வட்டார அடிப்படையில், 535 பெண்கள் வெற்றிபெற்றுள்ளனர். எனவே, உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த, மேலும் 1991 பெண்கள், மேலதிக பட்டியல்களின் மூலம் நியமிக்கப்பட வேண்டும்.
எனினும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 15 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த முடியவில்லை.
அதிகளவு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டதே இதற்குக் காரணம்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் விபரங்கள், நேற்று அரசிதழில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும், உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் விபரங்களை உள்ளடக்கிய அரசிதழை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, அரசாங்கம் அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அரசிதழ் வெளிவர இரண்டொரு நாட்கள் தாமதமாகலாம் என்றும் அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.