புத்தளம் – ரத்மல்யாய, அல்காசிம் வீட்டுத் தொகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மன்னாரில் இறுதிக் கிரியையொன்றில் பங்குபற்றிய 50 பேரைத் தேடி வருவதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பாதுகாப்புத் தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் பங்குபற்றிய நிலையில், மார்ச் மாதம் 16ஆம் திகதியன்று நாடு திரும்பியிருந்த 61 வயதுடைய நபரொருவருடன், மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்ற மரண வீடொன்றுக்குச் சென்றிருந்த மேற்படி 50 பேரும், தற்போது தலைமறைவாகியுள்ளனர் என்றும், இவர்களைத் தேடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் புத்தளம் மாவட்ட பொதுச் சுகாதாரப் பணிப்பாளர் என்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவிலிருந்து வந்திருந்த மேற்படி நபர், சுகாதாரத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 21 நாட்களுக்குப் பின்னர் அவருக்குப் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.
இதையடுத்து, அவர் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அவருடன் மன்னாருக்குச் சென்றவர்கள் தொடர்பில் தேடிப்பார்த்தபோது, அவர்கள் அனைவரும், அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள், தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பாதுகாப்புத் தரப்பினரும் தெரிவித்தனர்.

