பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும்.பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக அம்பாறை, ஒலுவில் விடுதியில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமான்லெப்பை, தாஹிர் அஷ்ரப் மற்றும் அப்துல் வாசித் உள்ளிட்டோரும் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
பிரதேச செயலகங்களோ அல்லது பிரதேச சபைகளோ இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உறுதியான உத்தரவாதத்தை தாம் ஏற்கனவே அரசாங்கத்திலிருந்து எழுத்து மூலமாக பெற்றுள்ளேன்.
இந்த விடயத்தை அரசியலாக்கவோ, இன உணர்வுகளை தூண்டி அரசியல் பலன் பெறவோ நான் விரும்பவில்லை. அதனாலேயே நான் இது பற்றி ஊடகங்களில் பிரஸ்தாபித்து, எந்தவொரு விளம்பரத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமிழ், முஸ்லிம் உறவைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் நான் செயற்படுகிறேன்.
முஸ்லிம் பெரும்பான்மையுள்ள பிரதேசங்களில் தமிழர்களுக்கும், தமிழ் பெரும்பான்மையுள்ள பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கும் எந்த அநீதியும் நிகழக்கூடாது என்பதே எனது நிலைபாடு. காணி, நிதி ஒதுக்கீட்டுகள் மற்றும் நிர்வாக தீர்மானங்களில் ஏதேனும் சரிபார்க்கக் கூடிய முறைப்பாடுகள் இருந்தால், அதனை மாவட்ட மட்டத்தில் இரு சமூக பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்யும் குழு அமைப்பது ஒரு கட்டமைக்கப்பட்ட வழியாக இருக்கலாம்.
கிராம சேவை பிரிவுகள் போன்ற நிர்வாக மாற்றங்களில் முன்பே சில அநீதிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது போன்ற பிரச்சினைகள் சமூகத் தலைவர்களுடன் கலந்துரையாடல் மூலமே தீர்க்கப்பட வேண்டும்.
இன அடிப்படையில் அரசியல் செய்வது எதிர்மறையான விளைவுகளையும் தமிழ் – முஸ்லிம் உறவுகளை பலவீனமாக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
கடந்த அரசாங்கங்களில் இஸ்ரேல், மொசாட் போன்ற வெளிநாட்டு உளவுத்துறைகள் அரசாங்கங்களுக்கு வழங்கிய ஆலோசனைகளின் பின்னணியில் இன மோதல்களும் அதனை அடுத்து நடந்த கொடூர கொலைகளிலும் ஏற்படுத்தப்பட்ட கசப்பான அனுபவங்களை ஒருபோதும் மறங்க முடியாது என்றார்.