ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்த தினம் முதல் (13) நேற்று நண்பகல் வரையான காலப் பகுதியில் சமாதான சூழ்நிலை நாட்டில் நிலவியதாக தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இடம்பெற்றதாகவும், அன்று முதல் நேற்று (13) நண்பகல் வரை தமது மத்திய நிலையம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்ஜுல கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட காலப் பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் என்பன தொடர்பில் 743 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதில், பொதுஜன பெரமுனவுக்கு எதிராக 312 முறைப்பாடுகளும், புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 307 முறைப்பாடுகளும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக 46 முறைப்பாடுகளும், முற்போக்கு சோசலிச கட்சிக்கு எதிராக 06 முறைப்பாடுகளும் சுயாதீன வேட்பாளர்கள் தொடர்பாக 72 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இந்த முறைப்பாடுகளுள் 45 தாக்குதல் சம்பவங்களும், அரச தொழில் வழங்கள் முறைப்பாடுகள் 38 உம், அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தல் தொடர்பில் 129 முறைப்பாடுகளும், பொருட்கள் விநியோகம் குறித்து 74 முறைப்பாடுகளும் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

