பாராளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக
பாராளுமன்ற பிரதி உணவு விநியோக முகாமையாளர் லால் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற பணியாளர்கள் சபைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 09 வருடங்களின் பின்னர் பாராளுமன்ற உணவகத்தில் உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் காலை உணவு ரூபா 60 இலிருந்து ரூபா 100 வரையும், மதிய உணவு ரூபா 150 இலிருந்து ரூபா 200 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் விருந்தினர்களாக அழைத்துவரப்படுவோர், 12 பேரை விட அதிகமாயின், ஒருவருக்கு ரூபா 600 வீதம் மதிய உணவுக்காக அறிவிடப்படும்.
ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள், பணியாளர்களுக்கான உணவு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான மதிய உணவு ரூபா 65 இலிருந்து ரூபா 70 வரையும், பால் தேனீர் ரூபா 10 இலிருந்து ரூபா 20 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.