2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை (G.C.E A/L Exam) முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் நாளை மறுதினம் (4) நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் தனியார் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
மீண்டும் விடுமுறை
டிசம்பர் 8ஆம் திகதி மீள பாடசாலைகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று அன்றுடன் இவ்வாண்டுக்கான சகல தவணைகளும் நிறைவடைவதோடு, டிசம்பர் 31ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

தொடர்ந்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ள நிலையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது.

