கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்க அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா – வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஆவார்.
சந்தேக நபரான பெண் நீண்ட காலமாக இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபரான பெண் ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் 5500 ரூபா முதல் 7000 ரூபா வரை இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள கணவர் தனக்கு இந்த இலத்திரனியல் சிகரட்டுகளை அனுப்பி வைத்ததாக சந்தேக நபரான பெண், பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.