2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
366 பாடப் புத்தகங்களுக்கான 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டியுள்ளது.
அதற்கமைய, தேசிய போட்டி விலை மனு முறைமையைக் கடைப்பிடித்து விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 29 நிறுவனங்கள் விலை மனுக்களைச் சமர்ப்பித்துள்ளன.
புதிய சுற்றறிக்கை
உயர்மட்ட பெருகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய, 3,491.47 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த 29 நிறுவனங்கள் மூலம் 366 பாடப் புத்தகங்களின் 25.49 மில்லியன் பிரதிகளை அச்சிடுவதற்குப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த தரம் 2 தொடக்கம் தரம் 11 வரை மாணவர்களை உள்வாங்குவதற்கு ஏற்ற வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, அதற்குப் பதிலாக புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.