இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வகுப்பறை ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் இணைந்து விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மீள் அறிவித்தல் வரை பெற்றோர் கூட்டங்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

