இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐசிசி மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
அனுபவம் வாய்ந்த வீராங்கனை ஜெமிமா ரொட்றிகஸ், 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சம்பியன் அணி வீராங்கனை ரிச்சா கோஷ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து ஒரு ஓவர் மீதமிருக்க இந்தியாவுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவி பிஸ்மா மாறூவ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகளுடன் 68 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காது இருந்தார். அவருடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்த ஆயிஷா நசீம் 25 பந்துகளில் 2 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்திய பந்துவீச்சில் ராதா யாதவ் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 19 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் ஜெமிமா ரொட்றிகஸ் 38 பந்துகளில் 8 பவுண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் ஷபாலி வர்மா 33 ஒட்டங்களையும் ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 5 பவுண்டறிகளுடன் ஆட்டமிழக்கமால் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் பந்துவிச்சில் நஷ்ரா சாந்து 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.