பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் கடமைக்கு திரும்பவுள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் 44 நாட்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இந்த காலப்பகுதியில் 15 பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சகல உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் தமது சம்மேளனத்தின் அனைத்து ஊழியர்களும் இன்று சேவைக்கு சமூகமளிக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
மாதாந்த நிலுவை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி 15,000 மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
2016 ஆம் ஆண்டு உடன்பாடு காணப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள கல்வி சாரா ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி தமது கோரிக்கைக்கான தீர்வு கிடைத்ததை தொடர்ந்து இன்று சேவைக்கு சமூகமளிக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.